சித்தர்கள் இறைவனை காரணன் என்றும் ஜீவனைப் பூரணன் என்றும் கூறுகின்றனர். ஆத்மாவின் உண்மை நிலை பரிபூரணனாக இருப்பது. ஏழு திரைகள் இவ்வுண்மையை மறைக்கின்றன. அவை: மாயாசக்தி, கிரியா சக்தி, பரா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி மற்றும் சித் சக்தி என்பவை. இந்த ஏழு திரைகளையும் கடந்த ஆத்மா தனது உண்மையான நிலையை ஜோதி சொரூபத்தை உணர்ந்துகொள்கிறது. அந்த உண்மைநிலையை மறைக்கின்றன. யோகத்தின் மூலம் இந்த ஏழு திரைகளையும் கிழித்தெறியலாம். மணிபூரக சக்கரம் என்பது மாற்றம் ஏறப்டுத்தும் சக்தி படைத்தது. சுவாதிட்டானம் என்பது நமது சம்ஸ்காரங்கள் செயல்படுவதற்கு முந்தைய நிலையில் இருக்கும் இடம். இந்த இரு இடங்களையும் அகத்தியர் பரபிரம்மத்தைப் பற்றிய அறிவுடன் பார்க்கவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.
சுப்பிரமணியரே பூரணத்தைப் பற்றிய அறிவை, பரவுணர்வை நமக்கு அருளுபவர். அவர் பூரணத்தை வீசுவேன் என்றது ஆத்மாவை உடலிலிருந்து வெளிப்படுவதைக் குறிக்கிறது. இது இடி தாக்குவதைப் போன்ற வலிமையான ஒரு அனுபவம். இவ்வனுபவம் அஞ்ஞானம் மிகுந்தவனுக்கு துன்பத்தையே தரும்.. அது நரகத்தைப் போன்ற அனுபவமாகும். அத்தகைய அறிவற்ற மனிதன் யார் என்றால் அவன் கங்கை என்பது லலாட சக்கரத்திலிருந்து கீழ் நோக்கி வரும் அமிர்தம் என்பதை அறியாமல் காசி நகரில் உள்ள நதிதான் அது என்று எண்ணி அதில் நீராடுபவன்.
அந்த அமிர்தம் ஆகாச கங்கை எனப்படுகிறது
வாசிதான் பலன் அனைத்தையும் கொடுக்கும் தெய்வம் என்பதை அறியாமல் கோயிலில் உள்ள சிலைகளைக் கும்பிடுபவன் (நமது உடலில் இறைவன் வாயுவாகவும் ஜீவன் குண்டலினி அக்னியாகவும் இருக்கிறார்கள் என்று அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் கூறுகிறார்) உண்மையை அறியாது ஊர் ஊராகத் திரிபவன், ஞானம் தரும் என்று பல வழிகளின் பின்னே அலைபவன். இந்த உண்மைகளை தான் எவ்வளவு கூறினாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அலைகின்றனர் என்று சுப்பிரமணியர் வருத்தத்துடன் கூறுகிறார்.
அருணாசல குருவின் நிஜானந்த போதம் என்ற நூலில் தச தீட்சையைப் பற்றிய விவரங்கள் உள்ளது. அவையாவன:
௧. உடலிலுள்ள கெட்ட நீர் அனைத்தும் வியர்வையாக வெளியேறும்
௨. முத்தோஷங்கலான வாதம், கபம், சிலோத்துமம் நீங்கும்.
௩. கெட்ட உதிரங்கள் கசியும்.
௪. சரீரத்தில் பாம்பு தோலை உரிப்பதைப் போல தோல் உரியும்.
௫. சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகும். பஞ்ச மூர்த்திகள் வேண்டியதைத் தருவர், அதாவது, பஞ்ச பூதங்கள் வசத்துக்குள் வரும்.
௬. சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறக்கும், தொலைப்பார்வை கிட்டும்.
௭. சட்டை வெளுப்பாகக் கழன்று தேகம் தீபம் போல பிரகாசிக்கும்.
௮. சடலம் பாரமற்றதாகும், லாகிரி என்ற இன்ப நிலை ஏற்படும். கூடுவிட்டு கூடு பாயும் திறம் வாய்க்கும்,
௯. தேகம் சூரியப் பிரகாசம் பெரும் அஷ்டமா சித்தி கூடும். செயலற்ற நிலையான கைவல்யம் கிட்டும். தேவர்கள் சேவை புரிவர்.
௧௦. தேகம் தீபம் போல பிரகாசிக்கும் அதைக் கத்தியாலும் வெட்ட முடியாது. இதுவே சொரூப சித்தி. அந்த யோகி இவ்வுலகில் மௌன நாளையில் நரை திரை, பிணி, மூப்பு, சாக்காடு இல்லாமல் வாழ்வார்.
மேற்கூறிய நிலையை எட்டிய யோகி தனது விழிப்புணர்வை இன்னும் விரிவாக்கி முப்பாழ் எனப்படும் சூனியத்தில் மூழ்கி தனது தனிப்பட்ட நிலையை இழப்பார். முப்பாழ் என்பவை மாயப்பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் என்பவை. இவை விழிப்புணர்வின் நிலைகளே. இந்த நிலைகள் அனைத்தையும் கடந்த யோகி வீடு எனப்படும் பரவுணர்வு நிலையை அடைவார். தனது விழிப்புணர்வை உடலில் உள்ள ஆறு சக்கரங்களுக்கும் மேலே உள்ள ஆறு ஆதாரங்களிலும் பயணிக்கச் செய்துஉச்ச நிலையை அடைவார். இந்த நிலையை அடைந்தவருக்கு பரவுணர்வும் பேரானந்தமும் கிட்டும்.
நன்றி:
http://subramanyarjnanam.blogspot.com
நமது ஆறுமுகத் தம்பிரான் இச்சொரூப சித்தி அடைந்தவர். நாமும் இப்பேரானந்த நிலையை அடைய பூரணத்துடன் இணைந்து காரணத்துடன் ஒன்றுவோம்.
No comments:
Post a Comment