Moving Image

Thursday, September 20, 2018

முருகனின் வேல் மயில் சூரசம்ஹாரம் என்பதன் மறைபொருள்

முருகனின் வேலும் மயிலும் சூரசம்ஹாரமும் என்றால் என்ன?  முதலில் அசுரர்கள் யார் என்பதைக் காண்போம்..

இந்த அசுரர்கள் யார் என்று வள்ளலார் விளக்குகிறார்.
 பத்மாசுரன் என்பது அவா,
கஜமுகன் என்பது மதம்,
சிங்கமுகன் என்பது மோகம்.
 இந்த மூன்றையும் ஐந்தறிவால் வெல்ல முடியாது.  ஆறாவது அறிவு அல்லது பகுத்தறிவு அல்லது கூர்மையான வேலால் ஐந்து சக்திகள் சுத்த ஞானம், சுத்த கிரியா ஆகியவற்றின் உதவியுடன் வெல்லவேண்டும்.

.  மேற்கூறிய மூன்று குணங்களும் அழிக்கப்பட்டாலும் அவற்றின் வாசனை அல்லது சுவடு எளிதில் நீங்குவதில்லை.  அந்த வாசனை சமயம் கிடைக்கும்போது மயில் தோகையை விரித்து ஆடுவதைப் போல பரந்து விரிகிறது.  தனது அழகால் தோகை நம்மை மயக்குவதைப் போல நம்மை மதியிழக்கச் செய்கிறது.

மயில் 
மயில் என்பது வாசி (இடகலை, பிங்கலை சுவாசம்). எனும் வாகனம்.  இந்த மயிலின்மேல் முருகன் இருப்பது என்பது பகுத்தறிவு அல்லது விழிப்புணர்வு இந்த வாசனை அல்லது விகல்ப ஜாலத்தைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பது.  

முருகனின் தண்டாயுதம் என்றால் என்ன?

 தண்டம் என்பது குண்டலினி சக்தி ஏறும் சுழுமுனை நாடி.
அது முருகன் அல்லது பரவுணர்வின் கட்டுப்பாட்டில் உள்ளது.  அதைத் தான் தண்டாயுதபாணி, வேலன் என்பது.

குமரகுருபரன்:

குமரன் என்பது கு என்னும் அஞ்ஞான இருட்டை மரிக்கச் செய்தவன், கொன்றவன் என்று பொருள்.  அவனே குரு.  அவன் உச்ச நிலையான பர நிலையில் இருப்பவன்.  அதனால் அவன் குமரகுரு பரன்.
ஆதி அந்தம் என்பது பிறப்பிறப்பையும்
அநாதி அந்தம் என்பது உச்ச முடிவான என்னும் நிலைத்திருக்கும் பரவுணர்வு நிலையையும் குறிக்கும்.
 இந்த இரண்டு நிலையும் மாயையைக் கொன்றால் ஏற்படும் என்று கூறும் சுப்பிரமணியர் அதனால்தான் தனக்கு குமரகுரு பரன் என்று பேர் ஏற்பட்டது என்கிறார்.
பொதுவாக குமரகுருபரன் என்று நாம் கூறும் பெயரை சுப்பிரமணியர் பாடலுக்காக குமரகுரு பரன் என்று பிரித்தது நமக்கு அவரது மூன்றுவித தன்மைகளைக் காட்டுகிறது!

சரியை என்பது கோவிலுக்குப் போவது விளக்கேற்றுவது போன்ற காரியங்களைச் செய்து வெளியில் இறைவனிடம் பக்தி செலுத்துவது.
  கிரியை என்பது மனதுள் இடைவிடாமல் இறைவனிடம் அன்பு செலுத்துவது.  யோகம் .
அதன் முடிவில் பெறுவது ஞானம்.. ஞானமே என்றும் அழியாமல் இருக்கும் விளக்கான ஆத்ம ஜோதி.- அது ஞான ஜோதி-  அறிவால் ஏற்படுவது. சுப்பிரமணியரே பூரணத்தைப் பற்றிய அறிவை, பரவுணர்வை நமக்கு அருளுபவர். சுப்பிரமணியர் என்பது பகுத்தறிவு.

சூரசம்காரத்தின் மறைபொருள்

திருப்பரங்குன்றம்    - மூலாதாரம்,
திருச்செந்தூர்             - சுவாதிஷ்டானம்,
பழனி                              - மணிபூரகம்,
சுவாமி மலை             - அனாகதம்,
திருத்தணிகை           - விசுத்தி மற்றும்
 பழமுதிர் சோலை   - ஆக்கினை சக்கரத்தையும் குறிக்கின்றன.
 சுப்பிரமணியர் ஷட் அக்ஷரங்களை, ஆறு எழுத்துக்களை, இந்த படைவீடுகளில் உறுதியாகப் பதிக்கவேண்டும் என்கிறார். நமது ஆக்னையில் ஒரு ஆறு பட்டையான மணி ஒளிவிட்டுக்கொண்டு இருக்கிறது.  இந்த ஜோதியே ஷண்முகன்.


உடலில் உள்ள சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைக் குறிக்கின்றது.  இவற்றை ஒரு யோகி கடக்கிறார் என்றால் அந்த தத்துவம் ஏற்படுத்தும் பிரிவினையைக் கடக்கிறார், அசுரரை வெல்கிறார் என்று பொருள்.
இறைவனின தில்லை நடனம்  ஆன்மாக்களின் ஆணவத்தை அழிப்பதைக் குறிக்கிறது.  இந்தக் கூத்தை ஒருவர் குண்டலினி யோகத்தின் உச்சிநிலையில் காண்கிறார்.  இந்த உச்ச நிலை அன்புநிலை. இந்த நிலையைத் தான் பச்சை மயில் ஏறி, வாசியின் மூலம், அடையப் பாய்கிறேன் என்கிறார் சுப்பிரமணியர்.  வாலை அல்லது குண்டலினியின் நிறம் பச்சை என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 சஹஸ்ராரம் என்பது உயிர்களின் லய நிலை, பிறவியற்ற நிலை.  ஐங்காயம் என்பது பஞ்ச கோசம் அல்லது மாயையால் விளைந்த உடல்களைக் குறிக்கிறது.  இந்த உடல்களுக்குக் காரணமான மாயை ஒடுங்கும் இடம் சஹஸ்ராரம். சஹாஸ்ராரத்தில் அனைத்தும் பரவுணர்வாக எவ்வித குணமும் இல்லாமல், வேறுபாடும் இல்லாமல் இருப்பது.    செத்தும் சாகாமல் இருக்கும் இடம் பரவுணர்வு நிலை.   உயிர் உடலினுள் நுழைவது சஹாஸ்ராரத்தின் மூலம்தான்.  அதனால்தான் பிறந்த குழந்தைகளின் மண்டையோடு ஒரு விரிசலை உடையதாக உள்ளது.  அந்தக் குழந்தை வளர்ந்து மண்டையோடு உறுதியானதாக மாறும்போது இந்த விரிசல் மூடிவிடுகிறது.  சஹாஸ்ராரத்தில் குருபாதம் காணக்கிடைகிறது.  இந்த சஹஸ்ராரம் பேசாத எழுத்தாக, “ம்” என்னும் எழுத்தாக இருக்கிறது என்கிறார் சுப்பிரமணியர்.
சரவணபவ என்ற மந்திரத்தில்

 முதல் இரண்டு எழுத்துக்கள் சர      - குமார பீஜம் என்றும்
அடுத்த இரு எழுத்துக்கள்        வண -  சக்தி பீஜம் என்றும்
 கடைசி இரு எழுத்துக்கள்       பவ    -  சிவ பீஜம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
 இந்த ஆறு எழுத்துக்களும் தூய்மை, செல்வம், ஒளி, மங்களம், பெருமை மற்றும் அளவற்ற ச்கதியைக் குறிக்கும்.


ஆறுமுகன்

முருகனின் ஆறு முகங்களில்
ஐந்து முகங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் என்ற செயல்களையும்
ஆறாவது முகம் ஞானத்தையும் குறிக்கின்றன.
வள்ளி தெய்வயானை மற்றும் வேலுடன் அவர் காணப்படுவது இச்சா, கிரியா ஞான சக்திகளைக் குறிக்கிறது.
அவர் மயிலின் மேல் காணப்படுவது அவர் மாயையைக் கடந்தவர் என்பதையும் வாசியை வழிநடத்தி திருக்கூத்தனின் உச்ச நிலையான அன்பு நிலையுடன்  இணைய வைப்பவன் என்றும் கொடியில் உள்ள சேவல் அவர் நாதப் பிரம்மம், மற்றும் காலத்தைக் கடந்தவர் என்பதையும் குறிக்கின்றன.  (சேவலின் கூவல் பகல் இரவு என்ற காலத்தின் பிரிவைக் குறிப்பிடுகிறது).

எனவே மெய்ப்பொருள் உணர்ந்து பற்ற வேண்டுவதைப் பற்றி அன்பு நிலை அடைவோம்!

Tuesday, September 11, 2018

சொரூப சித்தி அடைந்த ஆறுமுகத்தம்பிரான்


சித்தர்கள் இறைவனை காரணன் என்றும் ஜீவனைப் பூரணன் என்றும் கூறுகின்றனர்.  ஆத்மாவின் உண்மை நிலை பரிபூரணனாக இருப்பது.  ஏழு திரைகள் இவ்வுண்மையை மறைக்கின்றன.  அவை: மாயாசக்தி, கிரியா சக்தி, பரா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி மற்றும் சித் சக்தி என்பவை.  இந்த ஏழு திரைகளையும் கடந்த ஆத்மா தனது உண்மையான நிலையை ஜோதி சொரூபத்தை உணர்ந்துகொள்கிறது.  அந்த உண்மைநிலையை மறைக்கின்றன.  யோகத்தின் மூலம் இந்த ஏழு திரைகளையும் கிழித்தெறியலாம்.  மணிபூரக சக்கரம் என்பது மாற்றம் ஏறப்டுத்தும் சக்தி படைத்தது.  சுவாதிட்டானம் என்பது நமது சம்ஸ்காரங்கள் செயல்படுவதற்கு முந்தைய நிலையில் இருக்கும் இடம்.  இந்த இரு இடங்களையும் அகத்தியர் பரபிரம்மத்தைப் பற்றிய அறிவுடன் பார்க்கவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர். 

சுப்பிரமணியரே பூரணத்தைப் பற்றிய அறிவை, பரவுணர்வை நமக்கு அருளுபவர். அவர் பூரணத்தை வீசுவேன் என்றது ஆத்மாவை உடலிலிருந்து வெளிப்படுவதைக் குறிக்கிறது.  இது இடி தாக்குவதைப் போன்ற வலிமையான ஒரு அனுபவம்.  இவ்வனுபவம் அஞ்ஞானம் மிகுந்தவனுக்கு துன்பத்தையே தரும்..  அது நரகத்தைப் போன்ற அனுபவமாகும்.  அத்தகைய அறிவற்ற மனிதன் யார் என்றால் அவன் கங்கை என்பது லலாட சக்கரத்திலிருந்து கீழ் நோக்கி வரும் அமிர்தம் என்பதை அறியாமல் காசி நகரில் உள்ள நதிதான் அது என்று எண்ணி அதில் நீராடுபவன்.
அந்த அமிர்தம் ஆகாச கங்கை எனப்படுகிறது

வாசிதான் பலன் அனைத்தையும் கொடுக்கும் தெய்வம் என்பதை அறியாமல் கோயிலில் உள்ள சிலைகளைக் கும்பிடுபவன் (நமது உடலில் இறைவன் வாயுவாகவும் ஜீவன் குண்டலினி அக்னியாகவும் இருக்கிறார்கள் என்று அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் கூறுகிறார்உண்மையை அறியாது ஊர் ஊராகத் திரிபவன், ஞானம் தரும் என்று பல வழிகளின் பின்னே அலைபவன்.  இந்த உண்மைகளை தான் எவ்வளவு கூறினாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அலைகின்றனர் என்று சுப்பிரமணியர் வருத்தத்துடன் கூறுகிறார். 

அருணாசல குருவின் நிஜானந்த போதம் என்ற நூலில் தச தீட்சையைப் பற்றிய விவரங்கள் உள்ளது. அவையாவன:
௧. உடலிலுள்ள கெட்ட நீர் அனைத்தும் வியர்வையாக வெளியேறும்
௨. முத்தோஷங்கலான வாதம், கபம், சிலோத்துமம் நீங்கும்.
௩. கெட்ட உதிரங்கள் கசியும்.
௪. சரீரத்தில் பாம்பு தோலை உரிப்பதைப் போல தோல் உரியும்.
௫. சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகும்.  பஞ்ச மூர்த்திகள் வேண்டியதைத் தருவர், அதாவது, பஞ்ச பூதங்கள் வசத்துக்குள் வரும்.
௬. சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறக்கும், தொலைப்பார்வை கிட்டும்.
௭. சட்டை வெளுப்பாகக் கழன்று தேகம் தீபம் போல பிரகாசிக்கும்.
௮. சடலம் பாரமற்றதாகும், லாகிரி என்ற இன்ப நிலை ஏற்படும்.  கூடுவிட்டு கூடு பாயும் திறம் வாய்க்கும்,
௯. தேகம் சூரியப் பிரகாசம் பெரும் அஷ்டமா சித்தி கூடும். செயலற்ற நிலையான கைவல்யம் கிட்டும்.  தேவர்கள் சேவை புரிவர்.
௧௦. தேகம் தீபம் போல பிரகாசிக்கும் அதைக் கத்தியாலும் வெட்ட முடியாது.  இதுவே சொரூப சித்தி.  அந்த யோகி இவ்வுலகில் மௌன நாளையில் நரை திரை, பிணி, மூப்பு, சாக்காடு இல்லாமல் வாழ்வார்.


மேற்கூறிய நிலையை எட்டிய யோகி தனது விழிப்புணர்வை இன்னும் விரிவாக்கி முப்பாழ் எனப்படும் சூனியத்தில் மூழ்கி தனது தனிப்பட்ட நிலையை இழப்பார்.  முப்பாழ் என்பவை மாயப்பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் என்பவை.  இவை விழிப்புணர்வின் நிலைகளே.  இந்த நிலைகள் அனைத்தையும் கடந்த யோகி வீடு எனப்படும் பரவுணர்வு நிலையை அடைவார்.  தனது விழிப்புணர்வை உடலில் உள்ள ஆறு சக்கரங்களுக்கும் மேலே உள்ள ஆறு ஆதாரங்களிலும் பயணிக்கச் செய்துஉச்ச நிலையை அடைவார்.  இந்த நிலையை அடைந்தவருக்கு  பரவுணர்வும் பேரானந்தமும் கிட்டும்.
நன்றி: 
http://subramanyarjnanam.blogspot.com

நமது ஆறுமுகத் தம்பிரான் இச்சொரூப சித்தி அடைந்தவர். நாமும் இப்பேரானந்த நிலையை அடைய பூரணத்துடன் இணைந்து காரணத்துடன் ஒன்றுவோம்.